வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: November 2009

Sunday, November 29, 2009

கடைசி பயணம்

மண்ணிற்குள் உடல்...
அழும் உறவுகள்..!
காசுக்காக காத்திருக்கும்
வெட்டியான்..!
-சே.குமார்




Saturday, November 28, 2009

காதல்

ஓடி வந்து பேருந்தில்
ஏறினாய் நீ..!
பயத்தில் நகம்
கடித்தேன் நான்..!
மனசுக்குள்
தெய்வங்கள்..!

-சே.குமார்




Wednesday, November 25, 2009

நிலாப் பெண்

நிலாப் பெண்ணே நீ...
வளர்ந்து தேய்ந்தாலும்
தேய்ந்து வளர்ந்தாலும்
மூன்றாம் பிறையில்
அழகிய குழந்தை..!
பெளர்ணமியிலோ
உலக அழகி..!

(கிறுக்கல்களில் இது 50வது ஹைக்கூ. வலைத்தளத்தில் இது 78வது படைப்பு. இந்த நேரத்தில் என்னை எழுத்தாளனாக்கி சந்தோஷப்பட்ட எனது கல்வித் தந்தையும் பேராசிரியருமான திரு. மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கும் எனது எழுத்துக்களை படித்து என்னை ஊக்கப்படுத்திய உள்ளம் இன்று சில காரணங்களால் விரிசல் விட்டிருந்தாலும் என்றும் எனக்குள் இருக்கும் நண்பர் பேராசிரியர் கரு.முருகன் அவர்களுக்கும் இக்கவிதையை காணிக்கையாக்குகிறேன். - சே.குமார்)




Tuesday, November 24, 2009

ஞாபகமாய்..!

ஞாபக மறதியாய்
நீ விட்டுச் சென்ற
பேனா...
ஞாபகமாய்
என் பாக்கெட்டில்..!

-சே.குமார்




Sunday, November 22, 2009

சங்கமம்

உனக்கும் எனக்குமான
சந்திப்பில் சங்கமிப்பது
என்னவோ கண்கள்தான்
இருந்தும் படபடக்குது
மனசு..!

-சே.குமார்




Saturday, November 21, 2009

கனம்

உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது
கையிலிருக்கும்
செல்போன்..!

-சே.குமார்




பயணம்

மனதிற்குள் பயமிருந்தாலும்
சுகமாய்த்தான் இருந்தது
துப்பட்டாவால் முகம்
மறைத்து உன்னுடன்
நிகழ்ந்த பயணம்..!

-சே.குமார்




Friday, November 20, 2009

நொடி..!

நீ மணி முள்ளாக
இருந்தால் நான்
நொடி முள்ளாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்...
அப்பொழுதுதானே
நிமிடத்திற்கு ஒருமுறை
உன்னைச் சந்திக்கமுடியும்..!

-சே.குமார்




மௌனம்

நீ மௌனத்தால்
கொல்லாதே...
எனக்கு மௌனத்தை
கொல்வது எப்படி
என்று தெரியாது பெண்ணே...!



Wednesday, November 18, 2009

திரும்பாமல்...

நீ திரும்பிச் சிரிக்கும்
ஒற்றைச் சிரிப்புக்காக
திரும்பாமல் தவித்தது
மனசு..!

-சே.குமார்




தடை

சிறுநீர் கழிக்க
தடையாக
சுவரெங்கும்
சாமி படங்கள்..!

-சே.குமார்




புன்னகை

உன் புன்னகையால்
நொறுங்கியது
என் இதயமல்ல...
இன்பம்..!

-சே.குமார்




Saturday, November 14, 2009

பட்டிமன்றம்

நீ சூடியதால்
பூ அழகா..?
பூச் சூடியதால்
நீ அழகா..?
என்னுள்ளே
பட்டிமன்றம்..!

-சே.குமார்




Wednesday, November 11, 2009

குளியல்

அருவித் தண்ணியோ..!
குளத்துத் தண்ணியோ..!
சுகம் என்னவோ...
உன் கைபட்ட
குழாய் தண்ணீர்
குளியலில்தான்..!

-சே.குமார்




விளை நிலம்

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..!

-சே.குமார்




Saturday, November 7, 2009

பூ..!

மலரும்போதே
மனசுக்குள்...
சாமிக்கா..?
சாவுக்கா..?

(சில வருடங்களுக்கு முன் பாக்யா இதழில் வெளியான படத்திற்கு எழுதப்பட்டு தேர்வான மூன்று ஹைக்கூ கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி பாக்யா)

-சே. குமார்




Friday, November 6, 2009

விவாகரத்து

ஒத்துப்போகாத
மனங்களின்
ஒருமித்த முடிவு...!

-சே.குமார்




அலை

ஆர்ப்பரிக்கும் அலை...
குதூகலமாய் சிறுமி..!
குடும்ப சண்டைக்குள்
நிம்மதி இழந்த பெற்றோர்..!

-சே.குமார்




Wednesday, November 4, 2009

ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்...
நெல்லுக்காக
கூண்டைவிட்டு
வெளியே வந்தது
கிளி..!

-சே.குமார்




திருமணம்

கோலாகலமாய்
திருமணம்..!
சமையல் மேஸ்திரி
மனதில் சங்கடம்...
முதிர்கன்னியாய் மகள்..!

-சே.குமார்




ஊர்வலம்

மாட்டின்மேல்
ஊர்வலமாய்...
மனித மாடுகள்..!

-சே.குமார்




Sunday, November 1, 2009

அழைக்காமலே

ஆயிரம் முறை அழைத்தும்
வராத காகம்...
அழைக்காமலே வந்தது...
அப்பாவுக்கு திவசம்..!

-சே.குமார்




துணை

துணைக்கு வருவாயா
தூறலே...
வெயிலில் என்னவள்..!

-சே.குமார்




அப்பா

அப்பா கொடுத்த
காசு பத்திரமாய்...
காசு கொடுத்த அப்பா..?

-சே.குமார்